திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் மாதம் தலைமையேற்று நடத்தும் நிகழ்வுகளின்
விவரங்கள்
செப்.03,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் மாதம் தலைமையேற்று நடத்தும்
நிகழ்வுகளின் விவரங்களை திருப்பீட வழிபாட்டுத் துறை இப்புதனன்று வெளியிட்டது. முதல்
உலகப் போரில் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள Redipuglia கல்லறைக்கு, செப்டம்பர்
13, சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று மரியாதை செலுத்துவதோடு, அங்குள்ள
இராணுவ ஆலயத்தில் திருப்பலியாற்றுகிறார். அதற்கடுத்த நாள், செப்டம்பர் 14, ஞாயிறு
கொண்டாடப்படும் திருச்சிலுவை உயர்த்தப்பட்டத் திருநாளன்று, காலை 9 மணிக்கு புனித பேதுரு
பசிலிக்காவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்டத்தின் ஆயர் என்ற முறையில்,
20 தம்பதியரை திருமண உறவில் இணைக்கும் திருப்பலியை நிறைவேற்றுகிறார். செப்டம்பர் 21,
அடுத்த ஞாயிறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அல்பேனியா நாட்டிற்கு ஒருநாள் மேய்ப்புப்பணி
பயணம் மேற்கொள்கிறார் என்பது முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதி ஞாயிறான
செப்டம்பர் 28ம் தேதியன்று, காலை 10.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வயதில்
முதிர்ந்தவர்களுக்கென ஒரு சிறப்புத் திருப்பலியை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில்
நிறைவேற்றுகிறார்.