செப்.02,2014. ஈராக் மற்றும் காசாவில் வன்முறைக்குப் பலியாகிவரும் அப்பாவி மக்களுக்காக
மெழுகுதிரி ஏந்திய செபவழிபாடு ஒன்றை மேற்கொண்டனர் பாகிஸ்தான் லாகூரைச் சேர்ந்த கிறிஸ்தவப்
பெண்கள். பல்வேறுக் கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த மகளிர் ஒன்றுகூடி நடத்திய இந்த செபவழிபாட்டில்,
ஈராக் மற்றும் காசாவில் துன்பங்களை அனுபவித்துவரும் மக்களுக்கு ஐ.நா. அமைப்பு பாதுகாப்பு
உறுதியை வழங்கவேண்டும் என விண்ணப்பிக்கப்பட்டது. அப்பாவி மக்களின் இரத்தத்தால் இந்த
உலகு மேலும் சிகப்பாகிக்கொண்டு வருவது நிறுத்தப்படவேண்டும் என்ற நோக்குடன் இவ்விண்ணப்பங்களையும்
செபங்களையும் முன்வைப்பதாக உரைத்த இந்த கிறிஸ்தவ மகளிர், அனைத்துலக சமுதாயத்திற்கும்,
போரிடும் துருப்புகளுக்கும் தங்கள் உருக்கமான வேண்டுகோளையும் வைத்துள்ளனர்.