Boko Haram அச்சுறுத்தலுக்குப் பயந்து, பாதுகாப்பு வீரர்களுடன் நடைபோடுவது, மக்களை தன்னிடமிருந்து
பிரித்துவிடும் - பேராயர் Ignatius Kaigama
செப்.02,2014. நைஜீரியாவில் Boko Haram தீவிரவாதிகளால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றபோதிலும்,
தனக்கென தனியாக எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் தேவையில்லை என்று அறிவித்துள்ளார்,
அந்நாட்டுப் பேராயர் Ignatius Kaigama அவர்கள். பாதுகாப்பு வீரர்களுடன் நடைபோடுவது,
மக்களை தன்னிடமிருந்து பிரித்துவிடும் என்று கூறிய Jos உயர்மறைமாவட்டப் பேராயர் Kaigama
அவர்கள், சில வேளைகளில் அச்சம் தனக்குள் எழுந்தாலும், மனிதகுலத்தின் ஒன்றிப்பிற்காகவும்
வழிபாட்டு உரிமைக்காகவும் உயிர் துறக்க தான் தயாராகவே இருப்பதாகக் கூறினார். குடும்பம்,
குழந்தைகள் என்ற நெருங்கிய உறவுகளைத் துறந்து இறைவனுக்குப் பணியாற்ற தான் வந்துள்ளதால்,
தான் இவ்வுலகைவிட்டு திடீரென மறைந்தாலும், அதனால் பெரும் இழப்புக்கள் ஏதும் இராது என்ற
உணர்வே தனக்கு இந்த உள்மனச் சுதந்திரத்தைத் தந்துள்ளது என்று பேராயர் Kaigama அவர்கள்
எடுத்துரைத்தார்.