குழந்தைகள் மனதிலும் வன்முறையை வளர்க்கும் மதத் தலைவர்களைக் குறித்து நாம் மிகவும்
கவலை கொள்ளவேண்டும் - பேராயர் Khazen
ஆக.29,2014. ஆயுதங்கள் வழியே வன்முறைகளைக் காட்டும் மனிதர்களைவிட, குழந்தைகள் மனதிலும்
வன்முறையை வளர்க்கும் வகையில், மசூதிகளிலும், கோவில்களிலும் வெறுப்பைப் போதிக்கும் மதத்
தலைவர்களைக் குறித்தே நாம் மிகவும் கவலை கொள்ளவேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர்
கூறினார். சிரியாவின் அலெப்போவில் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர்
George Abou Khazen அவர்கள், இத்தாலியில் நடைபெற்ற Rimini கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு
அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். சிரியாவில் வாழும் இஸ்லாமியர், அனைவரோடும் இணைந்து
வாழும் மென்மையான எண்ணங்களும், பழக்கங்களும் கொண்டவர்கள் என்று கூறிய பேராயர் Khazen
அவர்கள், அந்நிய நாடுகளிலிருந்து சிரியாவிற்குள் ஊடுருவியுள்ள வன்முறையாளர்கள் தற்போது
சிரியாவில் வெறுப்பை வளர்க்கும் போதனைகளைப் பரப்பி வருகின்றனர் என்று கவலை தெரிவித்தார். இந்த
வன்முறையாளர்களுக்கு நிதி உதவிகள் செய்வது ஏனைய அரபு நாடுகள் என்பதை உலகம் நன்கு அறியும்
என்று கூறிய பேராயர் Khazen அவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக போர்க்களமாக மாறியுள்ள சிரியாவில்
அனைத்து அடிப்படை வசதிகளும் குறைந்துள்ளன என்று கூறினார்.