அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள்: எல்லை பாதுகாப்புப் படை சாதனை
ஆக.20,2014. இந்திய எல்லையைப் பசுமைமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய-வங்கதேசம்,
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அரைமணி நேரத்தில் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மரக்கன்றுகளை,
10,500 இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் நட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப்
படை ஐ.ஜி. பி.என். சர்மா இது தொடர்பாகக் கூறும்போது, “இச்செவ்வாய் காலை 10 மணிக்குத்
தொடங்கி, அரை மணி நேரத்தில் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. எல்லையைப்
பசுமைமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும்
மரக்கன்றுகள் வழங்கப்பட்டன” என்று தெரிவித்தார். ‘எனது பூமி, எனது கடமை’ என்ற திட்டத்தை
நிறைவேற்றியுள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இச்சாதனை லிம்கா சாதனைப் புத்தகத்தில்
இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன்
15,106 கி.மீ. தொலைவுக்கு இந்தியா எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இதில், 4,096 கி.மீ.
தொலைவு இந்தியா வங்கதேச எல்லையாகவும், 3,323 கி.மீ தொலைவு இந்தியா-பாகிஸ்தான் எல்லையாகவும்
உள்ளது. இந்த எல்லைப் பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி பிஎஸ் டோலியா, சில மரக்கன்றுகளை வங்கதேச எல்லைப்
பாதுகாப்புப் படை 12-வது பட்டாலியன் தலைவர் சலாலுதீன் கலீதாவிடம் கொடுத்தார். இது தொடர்பாகக்
கூறிய சலாலுதீன் கலீதா அவர்களும், நாங்களும் இத்திட்டத்தை வரவேற்கிறோம். வங்கதேச எல்லையை
பசுமை மயமாக்கும் முயற்சியை நாங்களும் தொடங்கவுள்ளோம்” என்று கூறினார்.