2014-08-06 15:49:03

மக்களின் நலனை முன்னிறுத்தும்படி ஈராக் நாட்டின் தலைவர்களை இறைவன் தூண்டவேண்டும் - முதுபெரும் தந்தை சாக்கோ


ஆக.06,2014. உலகெங்கும் உள்ள நல்மனதோர் அனைவரும் இணைந்து, ஆகஸ்ட் 6ம் தேதி உண்ணா நோன்புடன் கூடிய செபங்களை எழுப்புமாறு, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை முதலாம் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
கீழை வழிபாட்டு முறை திருஅவையின் முக்கியமான 12 திருநாட்களில், ஆகஸ்ட் 6ம் தேதி கொண்டாடப்பட்ட இயேசுவின் தோற்றமாற்றம் திருநாளும் ஒன்று. இத்திருநாளையோட்டி Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் வழியாக, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் இவ்விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளார்.
தங்கள் சொந்த நலன்களை விட்டுக்கொடுத்து, மக்களின் நலனை முன்னிறுத்தும்படி, ஈராக் நாட்டின் தலைவர்களை இறைவன் தூண்டவேண்டும் என்பது நமது செபமாக அமையவேண்டும் என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.
இதற்கிடையே, எகிப்தில் உள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, இரண்டாம் Tawadros அவர்கள், காசாப் பகுதியில் நிலையான அமைதி உருவாகவேண்டி, ஆகஸ்ட் 7ம் தேதி, இவ்வியாழன் முதல் 22ம் தேதி முடிய, 15 நாள் செப முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மக்களிடம் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : Zenit / Fides








All the contents on this site are copyrighted ©.