போர் அல்ல, அமைதியே இறுதியில் வெல்லும் - கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும்
தந்தை சாக்கோ
ஜூலை,30,2014. பெரியதொரு மீனால் விழுங்கப்பட்ட இறைவாக்கினர் யோனா, மீண்டும் வெளியே வந்ததுபோல,
போர் அல்ல, அமைதியே இறுதியில் வெல்லும் என்று கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை
முதலாம் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார். கிறிஸ்தவர்களையும், மோசுல் நகரிலிருந்து
வெளியேற்றப்பட்ட ஷியா இஸ்லாமியரையும், Erbil நகரில் அமைந்துள்ள புனித யோசேப்பு பேராலயத்தில்
இத்திங்களன்று சந்தித்த முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் இவ்வாறு கூறினார். ஈராக்கில்
துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் பிரெஞ்ச் நாட்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ள
பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்களான கர்தினால் Philippe Barbarin, ஆயர் Evry Michel
Duboust ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். பிரெஞ்ச் தலத்திருஅவை காட்டும்
அக்கறைக்கு நன்றி கூறிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், நம்பிக்கையை இழக்காமல் அமைதியை
நோக்கி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு கூடியிருந்தவர்களிடம் விண்ணப்பித்தார்.