சில நாடுகள் சிரியாவுக்கு ஆயுதங்களை வழங்கிவருவதை, ஐ.நா.அவை உடனடியாகத்
தடுத்து நிறுத்தவேண்டும் - Pax Christi
ஜூலை,30,2014. சிரியா நாட்டில் வன்முறையை வளர்க்கும் வகையில் ஒரு சில நாடுகள் அங்கு போரிட்டு
வரும் குழுக்களுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று Pax
Christi International என்ற அமைப்பு விண்ணப்பித்துள்ளது. சிரியாவில் நிலவும் பிரச்சனைக்கு
ஆயுதங்களின் பயன்பாடு எந்நாளும் ஒரு தீர்வாகாது எனபதை வலியுறுத்தும் Pax Christi அமைப்பினர்,
சுழல் படிகளைப் போல அங்கு வளர்ந்துவரும் வன்முறைகள் நாளுக்கு நாள் பெருகி வருவதைக் குறித்து
ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர். சில நாடுகள் சிரியாவுக்கு ஆயுதங்களை வழங்கிவருவதை,
ஐ.நா.அவை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும் என்ற சிறப்பு விண்ணப்பத்தை Pax Christi
அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சிரியாவில் நடைபெற்றுவரும் மோதல்களில் இதுவரை 1,60,000
பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 6,80,000 பேர் காயமுற்றுள்ளனர் என்றும், அந்நாட்டின்
மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் தங்கள் உறைவிடங்களை இழந்து, அவர்களில் 30 இலட்சம்
பேர் பக்கத்துக்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தோராய் சென்றுள்ளனர் என்றும் ஐ.நா.வின் மனித
உரிமை அமைப்பு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.