உலக வர்த்தகக் கோபுரங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலுவையை அகற்றக்கூடாது
- நீதி மன்றம் உத்தரவு
ஜூலை,30,2014. 2001ம் ஆண்டு நியூ யார்க் நகரில் உலக வர்த்தகக் கோபுரங்கள் இடிந்து விழுந்த
இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலுவையை அகற்றக்கூடாது
என்று அந்நகரின் நீதி மன்றம் இத்திங்களன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 2001ம் ஆண்டு
செப்டம்பர் 11ம் தேதி இரு விமானங்கள் கொண்டு தாக்கப்பட்டு, நொறுங்கி வீழ்ந்த வர்த்தகக்
கோபுரங்களின் இடிபாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இரு எஃக்கு சட்டங்கள் சிலுவை வடிவில் அமைந்திருந்தன. இந்தச்
சிலுவை அடையாளத்தைச் சுற்றி பலர் செபங்கள் எழுப்பி, விண்ணப்பத் தாள்களையும் வைத்து வந்தனர்.
எனவே, இந்தச் சிலுவை வடிவம் Ground Zero, அதாவது, பூஜ்ய பூமி என்றழைக்கப்படும் அவ்விடத்தில்
ஒரு காட்சிப் பொருளாக அமைந்தது. இச்சிலுவை வடிவத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்
என்று கடவுள் நம்பிக்கையற்றவர்கள் அமைப்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த்து. ஆயிரக்கணக்கான
மக்களைப் பலிகொண்ட இந்த விபத்தால் வருந்துவோருக்கு இந்தச் சிலுவை அடையாளம் ஆறுதல் தந்துள்ளது
என்பதால், அச்சிலுவை வடிவம் அகற்றப்படக் கூடாது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.