2014-07-29 15:56:32

மெக்சிகோவில் அமைதி மற்றும் வாழ்வுக்கு ஆதரவாக விசுவாசிகள் ஊர்வலம்


ஜூலை,29,2014. மெக்சிகோ நாட்டின் Nezahualcóyotl மறைமாவட்ட ஆயருடன் இணைந்து 5000க்கும் மேற்பட்ட விசுவாசிகள், அமைதி, வாழ்வு மற்றும் குடும்பத்திற்கு ஆதரவாக அமைதி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.
Nezahualcóyotl நகரின் மூன்று வெவ்வேறு பகுதிகளிலிருந்து துவங்கி நகரின் மையப் பகுதியில் சந்தித்து, அம்மறைமாவட்ட ஆயர் Héctor Luis Morales Sánchez தலைமையில் பேராலயம் சென்ற இக்குழு, அமைதி, வாழ்வு மற்றும் குடும்பத்திற்கென இரவு கண்விழிப்பு செப வழிபாட்டிலும் கலந்துகொண்டது.
இன்றைய சமூகச் சூழல்களை மனதில்கொண்டும், இவ்வுலகின் அமைதியற்ற நிலைகளைக் கவனத்தில்கொண்டும், நற்செய்தியின் ஒளியில் வாழ்வின் மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிக்க இவ்வூர்வலத்தை மேற்கொண்டதாக அம்மறைமாவட்ட விசுவாசிகள் தெரிவித்தனர்.
மெக்சிகோ நகருக்கு சிறிது வெளியே இருக்கும் Nezahualcóyotl நகரில் ஓராண்டிற்கு மேலாக, கடத்தல், சட்டவிரோத மரணங்கள், கொள்ளை, வன்முறை போன்றவைகளால் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.