2014-07-28 16:28:26

கர்தினால் பிரான்செஸ்கோ மர்க்கிசானோ மறைவு. திருத்தந்தையின் இரங்கல்தந்தி


ஜூலை,28,2014. இத்தாலியின் தூரின் நகரைப் பூர்வீகமாகக்கொண்ட கர்தினால் பிரான்செஸ்கோ மர்க்கிசானோவின் மறைவையொட்டி தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல்தந்தியை தூரின் பேராயருக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயர் மற்றும் கர்தினாலாக வத்திக்கானிலேயே பணியாற்றிய கர்தினால் மர்க்கிசானோ, தாராளமனதுடன் கூடிய பணியின் சிறந்த சாட்சியாக விளங்கினார் என, தன் இரங்கல் செய்தியில் கர்தினாலைப் புகழ்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினாலின் பூர்வீக இடமான தூரின் உயர்மறைமாவட்டத்தின் விசுவாசிகளுக்கும், அவரின் உறவினர்களுக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
1929ம் ஆண்டு இத்தாலியின் Racconigi எனுமிடத்தில் பிறந்து தூரின் உயர்மறைமாவட்டத்தின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு, 2003ல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்ட 85 வயது கர்தினால் மர்க்கிசானோவின் அடக்கச்சடங்கு புதனன்று காலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்தினால் மர்க்கிசானோ அவர்களின் மறைவுடன் திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 212 ஆகியுள்ளது. இதில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் தகுதியுடைய 80 வயதிற்குட்பட்ட கர்தினால்களின் எண்னிக்கை 118 ஆகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.