ஜூலை,26,2014. வத்திக்கான் நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மதிய உணவருந்தும் உணவகத்துக்குத்
திடீரென்று சென்று அவர்களுடன் உணவு மேஜையில் அமர்ந்து உணவருந்தி பணியாளர்கள் அனைவரையும்
வியப்பில் ஆழ்த்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். எந்த முன்அறிவிப்பும் இன்றி,
இவ்வெள்ளி பகல் ஒரு மணிக்கு வத்திக்கான் உணவகம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
மற்றவர்கள் போன்று, சாப்பாட்டுத் தட்டுகள் வைக்கப்படும் ட்ரேயுடன் வரிசையில் நின்று தனக்கு
வேண்டிய உணவைப் பெற்று அப்பணியாளர்கள் பத்துப் பேருடன் அமர்ந்து உணவருந்தியுள்ளார். ஏறக்குறைய
நாற்பது நிமிடங்கள் அங்குச் செலவிட்டு அப்பணியாளர்களுடன் பல விடயங்கள் பற்றிப் பேசி,
அனைவரையும் ஆசீர்வதித்து, அனைவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டு வத்திக்கான் சாந்தா
மார்த்தா இல்லம் திரும்பியுள்ளார் திருத்தந்தை. மேலும், இச்சனிக்கிழமை பிற்பகலில்
இத்தாலியின் கசெர்த்தாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு இரவு 8 மணிக்கு மேல் வத்திக்கான்
திரும்புவதற்குத் திட்டமிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மீண்டும் வருகிற திங்களன்று,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது நண்பர் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை பாஸ்டர் Giovanni
Traettino அவர்களுடன் கசெர்த்தா செல்வார். இப்பயணம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்
தனிப்பட்ட பயணமாகும்.