2014-07-26 12:14:03

மதுரை உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர் அந்தோணி பாப்புசாமி


ஜூலை,26,2014. இந்தியாவின் மதுரை உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிவந்த பேராயர் பீட்டர் ஃபெர்னான்டோ அவர்களின் பணி ஓய்வை, திருஅவைச் சட்டம் 401, பிரிவு 1ன்படி ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்களை, மதுரை உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக நியமித்துள்ளார்.
1949ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியன்று மாரம்பாடியில் பிறந்த புதிய பேராயர் பாப்புசாமி அவர்கள், 1976ம் ஆண்டு குருவாகவும், 1998ம் ஆண்டு மதுரை உயர்மறைமாவட்டத் துணை ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். 2003ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதியன்று திண்டுக்கல் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார்.
தற்போது, தமிழக ஆயர் பேரவையின் குருக்கள் மற்றும் துறவியர் பணிக்குழுவின் தலைவராக இருக்கிறார் மதுரை உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.