புனித Pantaleon திருத்தலப் பொன்விழாவுக்குத் திருத்தந்தை வாழ்த்துச் செய்தி
ஜூலை,24,2014. புனித Pantaleon திருத்தலத்திலிருந்து திரும்பியபோதேல்லாம் ஆன்மீகப் புத்துணர்வும்,
விசுவாசத்தில் உறுதியும் பெற்றுத் திரும்பியுள்ளேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
கூறினார். அர்ஜென்டீனாவின் Buenos Aires உயர்மறைமாவட்டத்தின் ஒரு பங்காக விளங்கும்
புனித Pantaleon திருத்தலம், ஜூலை 27, வருகிற ஞாயிறன்று, தன் 50ம் ஆண்டைச் சிறப்பிக்கும்
தருணத்தில், இத்திருத்தலத்திற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார். Buenos Aires உயர்மறைமாவட்டத்தின் பேராயராக தான் பணியாற்றியபோது,
இத்திருத்தலத்தில் ஒப்புரவு அருள்சாதனம் வழங்கச் சென்ற தருணங்களை திருத்தந்தை தன் செய்தியில்
நினைவு கூர்ந்துள்ளார். இத்திருத்தலம் ஒரு கோவிலாக ஓரிடத்தில் நிலைத்திருந்தாலும்,
இங்கு வரும் மக்களுடன் இறைவன் பயணம் செய்கிறார் என்பதை தான் உணர்ந்ததாக திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். மருத்துவரான
புனித Pantaleon பரிந்துரையால் அனைவரும் நலவாழ்வு வாழ, தான் வேண்டுவதாகக் கூறியத் திருத்தந்தை,
தனக்காகவும் மக்கள் அனைவரும் செபிக்கும்படி விண்ணப்பித்துள்ளார். புனித Pantaleon
திருத்தலத்தில் ஜூலை 18, கடந்த வெள்ளியன்று துவங்கிய நவநாள் முயற்சிகள், ஜூலை 27 ஞாயிறன்று
நிறைவுறும் என்றும், அன்று காலை 5 மணி முதல், நடு இரவு முடிய தொடர்ந்து பத்து திருப்பலிகள்
நிறைவேறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.