2014-07-24 15:16:40

தைவான் நாட்டு விமான விபத்தில் பலியானோர்க்கு திருத்தந்தை செபம்


ஜூலை,24,2014. ஜூலை 23, இப்புதனன்று தைவான் நாட்டு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுதாபத் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.
Taipei பேராயர் John Hung Shan-chuan அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ள இத்தந்தியில், விபத்தில் உயிரிழந்தோருக்கு தன் செபங்களையும், விபத்தில் காயமுற்றோர், மற்றும் தன் உறவுகளை இழந்தோருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
54 பயணிகளையும், 4 விமானப் பணியாளர்களையும் சுமந்து சென்ற TransAsia விமானம், Matmo என்ற புயலின் காரணமாக அவசரமாகத் தரையிறங்க முயற்சித்தபோது, இவ்விபத்து நிகழ்ந்தது என்றும், விமானத்தில் இருந்த 47 பேர் உயிரிழந்தனர் என்றும், 11 பேர் காயமுற்றனர் என்றும் கூறப்படுகிறது.
விபத்திற்கான சரியான காரணங்கள் இன்னும் தெளிவாகவில்லை என்றும், விமானம் தரையிறங்கிய வேளையில் அங்கிருந்த வீடுகளில் மோதியதில் மேலும் 5 பேர் காயமுற்றனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.