ஆப்ரிக்கக் கண்டத்தில் தொடர்ந்து மறைப்பணியாற்ற நாம் அழைக்கப்படுகிறோம், கர்தினால் Filoni
ஜூலை,24,2014. இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, மறைப்பணியாளர்கள் ஆப்ரிக்கக்
கண்டத்தில் ஆற்றிய பணிகளுக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், இப்பணியைத் தொடர இன்றும் நாம்
அழைக்கப்படுகிறோம் என்பதை உணர வேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். கிழக்கு
ஆப்ரிக்காவின் எட்டு நாடுகளின் ஆயர்கள் பேரவை ஒருங்கிணைந்து ஜூலை 16 முதல் 26 முடிய Malawiயில்
மேற்கொண்டுள்ள கூட்டத்திற்கு, நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando
Filoni அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். நற்செய்தியின் மகிழ்வு
என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள திருத்தூது அறிவுரையிலிருந்து
மேற்கோள்களைக் கூறும் கர்தினால் Filoni அவர்களின் செய்தி, வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும்
ஆயர்கள் சிறப்பு மாமன்றம் குறித்தும் எடுத்துரைக்கிறது. AMECEA என்று அழைக்கப்படும்
இந்த ஆயர்கள் பேரவை கூட்டம், "உண்மையான மனமாற்றம் மற்றும், கிறிஸ்தவ நம்பிக்கைக்கு சான்று
பகர்வதன் மூலமாக, புதிய வழியில் நற்செய்தியின் அறிவிப்பு" என்ற மையக் கருத்துடன் கூடியுள்ளது.