2014-07-21 16:25:45

திருத்தந்தை : வன்முறையை வன்முறையால் அல்ல, அமைதியாலேயே வெல்ல முடியும்


ஜூலை,21,2014. ஒவ்வொருவரிலும் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்புரவை நோக்கிய ஆர்வத்தைக் கொணர இறைவனை நோக்கி வேண்டுவோம் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
உலகின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக மத்தியக் கிழக்குப்பகுதியிலும் உக்ரைனிலும் இடம்பெறும் மோதல்களும், பதட்டநிலைகளும் நிறுத்தப்பட செபிப்போம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறையை வன்முறையால் வெல்ல முடியாது, அமைதி ஒன்றால் மட்டுமே அதனை வெல்ல முடியும் என்றார்.
மத்தியக்கிழக்குப் பகுதியில் சமூக நலனுக்கு பெரும்பங்காற்றியுள்ள கிறிஸ்தவ சமூகம், தற்போது சித்ரவதைகளை அனுபவிக்கும் ஒரு சமூகமாக மாறியுள்ளதாக தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்தையும் விட்டுவிட்டு குடிபெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இம்மக்களோடு, தான் என்றும் ஒன்றித்திருப்பதாகவும் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கும் ஒப்புரவுக்கும் நம்மில் ஆர்வம் பெருக அமைதியின் மன்னராம் இறைவனை நோக்கி வேண்டுவோம் எனவும் அழைப்பை முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.