ஜூலை,19,2014. இந்தியாவில் மூன்றில் ஒருவர் இளையோர், ஐந்தில் ஒருவர் வளர்இளம் பருவத்தினர்
என ஐ.நா. மக்கள் தொகை அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகின்றது. இந்தியாவில் 10 முதல் 19
வயதுடையவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 30 இலட்சமாகவும், 15 முதல் 24 வயதுடையோரின் எண்ணிக்கை
23 கோடியே 10 இலட்சமாகவும் உள்ளது எனவும், இவர்களில் பெரும்பாலோனோர் கல்வியறிவு பெற்றவர்களாக
உள்ளனர் எனவும் அந்த ஆய்வறிக்கை கணித்துள்ளது. 2011ம் ஆண்டில் 18 மேற்காசிய நாடுகளில்
இருந்த மொத்த மக்களின் எண்ணிக்கையும், இந்தியாவிலுள்ள இளைஞர்களின் எண்ணிக்கையும் ஏறத்தாழ
சரிசமமாக உள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்தியாவிலுள்ள மொத்த வளர்இளம் பருவத்தினரில்
72 விழுக்காட்டினரும், மொத்த இளையோரில் 68 விழுக்காட்டினரும் கிராமப்புறங்களில் வாழ்வதாகவும்
அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்காளம் போன்ற
மாநிலங்களில் 85 முதல் 95 விழுக்காடு வரையில் வளர்இளம் பருவத்தினரும், இளையோரும் கல்வி
அறிவு பெற்றுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இது கடந்த 10 ஆண்டுகளாக அதிக விழுக்காட்டைக்
கொண்டுள்ளது.