காசா பகுதியில் மருத்துவ உதவிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன - 41 அகில உலக மருத்துவ
மற்றும் மனிதாபிமான அமைப்புகளின் அறிக்கை
ஜூலை,18,2014. காசா பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் தாக்குதல்களால் அப்பகுதியில்
உள்ள மருத்துவ உதவிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்று அகில உலக மருத்துவ மற்றும்
மனிதாபிமான அமைப்புகள் அறிக்கையொன்றை விடுத்துள்ளன. இந்தத் தாக்குதல்களால் பெருமளவில்
காயமடைந்துள்ளோர் சாதாரண குடிமக்களே என்று கூறும் இவ்வறிக்கை, அப்பகுதியில் ஏற்பட்டுள்ள
மின்சக்தி துண்டிப்பு, எரிபொருள் பற்றாக் குறை ஆகியவை இந்தப் பிரச்னையை ஆபத்தான அளவு
அதிகரித்துள்ளது என்று இவ்வறிக்கை கூறுகிறது. எரிபொருள் பற்றாக் குறையால், பாலஸ்தீன
அரசு இயக்கிவந்த ஆம்புலன்ஸ் துரித வண்டிகள் 25 விழுக்காடு நிறுத்தப்பட்டுள்ளதால், காயமடைந்தோர்
மருத்துவ மனைகளை அடைவதற்கும் வழியின்றி உள்ளது என்ற அவல நிலையை இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது. Action
Aid, Oxfam, HelpAge International மற்றும் எல்லை கடந்த மருத்துவர் அமைப்புக்கள் என
41 மருத்துவ மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் இந்த அறிக்கையை உறுதி செய்து கையெழுத்திட்டுள்ளன.