2014-07-17 15:35:05

திருத்தந்தையின் Twitter செய்தி - மறைபணி ஆற்றுவது, திருஅவையின் இயல்பு


ஜூலை,17,2014. "மறைபணி ஆற்றுவது, திருஅவையின் இயல்பு. ஆண்களும், பெண்களும் இயேசுவைச் சந்திப்பதற்கென்று உருவாக்கப்பட்டுள்ளது திருஅவை" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் Twitter செய்தியாக இவ்வியாழனன்று வெளியிட்டார்.
ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் திருத்தந்தை வெளியிட்டுவரும் Twitter செய்திகளில், திருஅவையின் பண்புகளைக் குறித்து பல வேளைகளில் கருத்து வெளியிட்டுள்ளார்.
திருஅவை, தன்னிலேயே தங்கி சுகம் காணும் ஒரு சமூகச் சேவை நிறுவனம் அல்ல; மாறாக, சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் மக்களைத் தேடிச் சென்று பணிபுரிவதே திருஅவையின் முக்கியப் பணி என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வரும் கருத்து.
போர்க்களத்தில் காயமுற்றோரைக் காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவக் கூடாரம் போல, இவ்வுலகில் பல வழிகளில் காயமுற்று இருப்போருக்கு உதவுவதே திருஅவை, என்று திருத்தந்தை ஒரு முறை பயன்படுத்திய ஓர் உருவகம், உலக ஊடகங்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.