2014-07-14 16:06:59

திருத்தந்தை : நோயாளிகள், இறைவனின் இரக்கம்நிறை அன்பின் சாட்சிகளாக விளங்க வேண்டும்


ஜூலை14,2014. உரோம் நகரின் ஜெமெல்லி கத்தோலிக்க மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு ஆறுதல் மொழிகளுடன் கூடிய ஆசீர் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜெமெல்லி மருத்துவமனையில் நோயாளிகளைச் சந்திப்பதற்கு கடந்த மாதம் 27ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தனது பயணம் கடைசி நேரத்தில் இடம்பெறாமல் போனதற்கு, தன் வருத்தத்தை இந்த ஒலி ஒளிசெய்தியில் வெளியிட்டு, அச்சந்திப்பு இடம்பெறாமல் போனதற்கு அந்நாளில் தனக்கு ஏற்பட்ட கடுமையான தலைவலியே காரணமாகும் எனவும் தன் வருத்தத்தை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இச்சந்திப்புக்காக சிறந்த முறையில் ஏற்பாடுகளைச் செய்து வந்திருந்த அனைவருக்கும் தன் நன்றியையும் அந்த செய்தியில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை. ‘உடலளவில் நீங்கள் பலமற்றவர்களாக இருந்தாலும், இறைவனே உங்கள் பலம் என்பதன், மற்றும் இறைவனின் இரக்கம் நிறை அன்பின் சாட்சிகளாக விளங்கவேண்டும்’ என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் இந்த ஒலி ஒளி வாழ்த்துச் செய்திக்கு தங்கள் நன்றியை வெளியிட்டு ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகள் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.