"உலகின் ஏதோ
ஒரு மூலையில், யாரோ ஒருவர் பாடுவதற்கும், ஆடுவதற்கும்,
கதை சொல்வதற்கும், கதை கேட்பதற்கும் இருக்கும்வரை வாழ்வு தொடரும்" (Life will
go on as long as there is someone to sing, to dance, to tell stories and to listen)
என்று அமெரிக்கப் பழங்குடியில் பிறந்த வழக்கறிஞர் Oren Lyons அவர்கள் கூறியுள்ளார். கலையும்
கதையும் இவ்வுலகில் இருக்கும்வரை வாழ்க்கை தொடரும் என்பது, மனதுக்கு நிம்மதி தரும் ஓர்
எண்ணம். இவ்வுலகின் இயக்கத்தையும், இவ்வுலகை இயக்கும் கடவுளையும் கலை வடிவில், கதை வடிவில்
நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். கடவுளைப் புரிந்துகொள்வதற்குத் தலைசிறந்த
வழி, கதைகள் என்பதை உலகின் எல்லா மதங்களும் உணர்ந்துள்ளன. எனவே, கதைகள் இல்லாத மதங்களே
இல்லை என்று சொல்லலாம். எந்த ஒரு குழந்தைக்கும் கடவுளை அறிமுகம் செய்ய பயன்படும் சிறந்த
கருவி கதைகளே. வயதில் முதிர்ந்த பின்னரும் கதைகளின் மீது நம் ஈடுபாடு குறையாமல் இருந்தால்
அதை தனிப்பட்ட ஒரு வரம் என்றே சொல்லவேண்டும். எல்லையற்ற கடலாக பரந்து விரிந்திருக்கும்
கடவுளை, நாம் முற்றிலும் அறிந்துகொள்ள முடியாது. ஆனால், இந்தக் கடலில் மூழ்கி நாம் கண்டெடுக்கும்
அரிய முத்துக்கள், கடவுளைப் பற்றி நாம் கற்றுக்கொண்ட, கேள்விப்பட்ட கதைகள். கதைகளுக்கு
உள்ள ஆற்றலை நன்கு உணர்ந்தவர் இயேசு. எனவே, அவர் கடவுளைப்பற்றி, கடவுளின் அரசைப்பற்றி
விரிவான இறையியல் விளக்கங்களை சொல்லித் தரவில்லை. கடவுளையும், அவரது அரசையும் அவர் கதைகள்,
மற்றும் உவமைகள் வழியே அறிமுகப்படுத்தினார்.
இயேசு ஏன் உவமைகளில் பேசினார் என்ற
கேள்வியை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கிறோம். இயேசு ஏன் உவமைகள் வழியே கற்பித்தார்
என்பதைப் புரிந்துகொள்ள, புகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டி, Anthony de Melloவின் 'One Minute
Wisdom' அதாவது, 'ஒரு நிமிட ஞானம்' என்ற நூலில் காணப்படும் எளியதொரு கதை உதவியாக இருக்கும்: குரு
எப்போதும் கதைகளையேக் கூறிவந்தார். அவர் கூறிய கதைகள் சீடர்களுக்குப் பிடித்திருந்தன.
இருந்தாலும், இன்னும் ஆழமான உண்மைகளை தங்கள் குரு கற்றுத்
தரவேண்டும் என்று சீடர்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் என்னதான் வற்புறுத்திக் கேட்டாலும்,
குரு சொன்ன ஒரே பதில் இதுதான்: "மனிதர்களுக்கும், உண்மைக்கும்
இடையே உள்ள சுருக்கமான வழி, கதையே. இதை நீங்கள் இன்னும்
புரிந்து கொள்ளவில்லை." உண்மைக்கும், நமக்கும், உண்மைக் கடவுளுக்கும், நமக்கும்
இடையே உள்ள சுருக்கமான வழி கதைகளே என்று இயேசு உணர்ந்திருந்தார். அதுவரை, மதத் தலைவர்களால்
இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், கல்லில் பொறிக்கப்பட்ட கட்டளைகளில் உறைந்திருந்த
கடவுள். அவர் மக்களிடமிருந்து வெகு தூரத்தில் வாழ்ந்துவந்தார். அத்தகையக் கடவுளை, கனிவான
ஒரு தந்தையாக கதைவடிவில் இயேசு தன் இஸ்ரயேல் மக்களுக்கு மீண்டும் அறிமுகம் செய்துவைத்தார்.
கதைகளுக்கு மற்றோர் ஆற்றல் உண்டு. மனிதர்களாகிய நாம் வகுத்துக்கொண்ட நாடு, மதம்,
மொழி, கலாச்சாரம், என்ற எல்லைகளைக் கடந்து செல்லும் ஆற்றல் கதைகளுக்கு உண்டு. இத்துடன்,
மிக முக்கியமாக, காலத்தைக் கடந்து செல்லும் ஆற்றலும் கதைகளுக்கு உண்டு. கதைகளுக்கு உள்ள
இவ்வகை ஆற்றலால்தான் இயேசு கூறிய கதைகளும், உவமைகளும் அவர் வாழ்ந்த குறுகிய நிலப்பரப்பைத்
தாண்டி, 20 நூற்றாண்டுகளைத் தாண்டி, இன்றளவும் நம் மத்தியில் வாழ்ந்து வருகின்றன. கதைகளைப்பற்றி,
இந்த அறிமுகத்தை இன்று தருவதற்கு இரு காரணங்கள் உண்டு.
இயேசு ஏன் உவமைகளில் பேசினார்
என்ற கேள்வியை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கிறோம் என்பது ஒரு காரணம். இன்று முதல்
நவம்பர் மாத இறுதிவரை நாம் பயணம் செய்யவிருக்கும் நமது வழிபாட்டு ஆண்டில், இன்னும் 20
ஞாயிறுகள் உள்ளன. இவற்றில், 10 ஞாயிறுகள் மத்தேயு நற்செய்தியில் இயேசு வழங்கிய அற்புதமான
உவமைகளைச் சிந்திக்கும் வாய்ப்பு பெறுகிறோம் என்பது மற்றொரு முக்கியமான காரணம். நற்செய்தியாளர்
மத்தேயு தொகுத்துள்ள உவமைகளிலேயே புகழ்பெற்ற 'விதை விதைப்பவர் உவமை' இன்றைய நற்செய்தியாக
நமக்கு வழங்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற உவமை என்று சொல்லும்போது, கூடவே ஓர் எச்சரிக்கை
மணியும் ஒலிக்கிறது. புகழ்பெற்றவை எதையும், அடிக்கடி கேட்கவும், பார்க்கவும் வாய்ப்புக்கள்
எழுவதால், "ஓ, இது நமக்குத் தெரிந்ததுதானே!" என்ற ஓர் அலட்சிய மனநிலை நமக்குள் தோன்றும்
ஆபத்து உண்டு. இயேசுவின் புகழ்பெற்ற கூற்றுக்களுக்கும் குறிப்பாக, அவர் சொன்ன புகழ்பெற்ற
உவமைகளுக்கும் இதே ஆபத்து உள்ளது. நமது அலட்சியப் போக்கை உணர்ந்தவர்போல, 'விதை விதைப்பவர்
உவமை'யின் இறுதியில் இயேசு ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்: "கேட்கச் செவியுள்ளோர்
கேட்கட்டும்" (மத்தேயு 13:9) என்ற வார்த்தைகளுடன் அவர் தன் உவமையை நிறைவு
செய்கிறார். இவ்வார்த்தைகளை இயேசு கூறும்போது, "நான் சொன்ன உவமையைக் கூர்ந்து கவனியுங்கள்"
என்பதைச் சொல்லாமல் சொல்கிறார். எதைக் கவனிப்பது? இயேசு கூறும் இவ்வுவமையில், விதைப்பவர்,
விதை, விளைநிலம் என்ற மூன்று கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றில், விதை, விளைநிலம்
இரண்டையும் குறித்து இயேசு விளக்கங்கள் தருகிறார். இந்த உவமையைச் சிந்திக்கும்போதெல்லாம்,
நமது சிந்தனைகளும் பொதுவாக விதை, விளைநிலம் என்பனவற்றையேச் சுற்றிவந்துள்ளன. இன்று, ஒரு
மாற்றமாக, நாம் விதைப்பவர் மீது நமது கவனத்தைத் திருப்புவோம்.
விதைப்பவர் எடுத்துச்
சென்ற விதைகள், விளைநிலத்தில் மட்டுமல்ல, சுற்றியிருந்த பாதை, பாறைகள், முட்புதர்கள்
என்று பல இடங்களிலும் விழுந்தன என்று இயேசு கூறினார். இது விதைப்பவரின் கவனக்குறைவால்
நிகழ்ந்ததா அல்லது, விதைப்பவர் தாராள மனதுடன் விதைகளை அள்ளித் தெளித்தாரா? என்ற கேள்விகள்
எழுகின்றன. இயேசுவின் இவ்வுவமை, இறை வார்த்தையை மையப்படுத்தியது என்ற கண்ணோட்டத்தில்
பார்க்கும்போது, விதைப்பவர் இவ்வாறு செயல்பட்டது, அவரது தாராள மனதைக் காட்டுகிறது என்ற
பொருளே பொருத்தமாக உள்ளது. விதை விழும் இடம், பாதையோரமாக இருந்தால் என்ன, பாறையாக
இருந்தால் என்ன, முட்புதராக இருந்தால் என்ன... அவற்றிலும் விதைகளைத் தெளிப்பது, இறைவார்த்தையைச்
சுமந்து செல்பவரின் கடமை. பாதையோரம் விழுந்தால் பயன்தருமா? பாறையிலும், முட்புதரிலும்
விதைப்பது மதியீனம் அல்லவா? என்று கணக்குப்பார்த்து, தயங்கித் தயங்கிச் செயல்படுவோர்,
இறை வார்த்தை என்ற விதைக்கு தடை விதிப்பவர்களே! தயக்கம் ஏதுமின்றி, நிபந்தனையற்ற அன்பை
வெளிப்படுத்தும் இறைவனிடம், "ஆற்றில் கொட்டினாலும், அளந்து கொட்டவேண்டும்", "பாத்திரம்
அறிந்து பிச்சையிடவேண்டும்" என்பன போன்ற பழமொழிகள் அர்த்தமற்று போகும். அத்தகைய இறைவனின்
வார்த்தைகளை உலகில் விதைக்கச் செல்லும் நாம், தரம் மிகுந்த, நன்கு உழுது உரமிடப்பட்ட
நிலத்தில் மட்டுமே விதைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றால், அது இறைவார்த்தையை விலங்கிட்டு
சிறைப்படுத்தும் முயற்சியாக அமையும். நாம் என்னதான் தடைகள் விதித்தாலும், விலங்கிட்டு
சிறையில் அடைத்தாலும், இறைவார்த்தை, தன் செயல்களை ஆற்றியே தீரும் என்பதை இறைவாக்கினர்
எசாயா இன்றைய முதல் வாசகத்தில் திட்டவட்டமாகக் கூறுகிறார். அதுவும், இவ்வார்த்தைகளை இறைவனே
நேரடியாகச் சொல்வதுபோல் இன்றைய முதல் வாசகத்தில் ஒலிக்கின்றன: இறைவாக்கினர் எசாயா
55: 10-11 மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை
நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு
விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச்
செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும்
வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக
நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.
இயேசு
அறிமுகப்படுத்தும் விதைப்பவர் வழியாக நமக்கு நல்லதொரு பாடத்தை புகட்டுகிறார். அதாவது,
இனம், குலம், மதம், தரம் என்ற பல எல்லைகளை நாமே வரையறுத்துக்கொண்டு, அந்த எல்லைகளுக்குள்
மட்டுமே இறைவார்த்தை என்ற விதையைப் பயன்படுத்த வேண்டும் என நினைப்பது தவறு என்பதை இயேசு
இந்த விதைப்பவர் வழியே சொல்லித்தருகிறார். நிபந்தனைகள் ஏதுமின்றி, தங்கு தடையின்றி,
தாராளமாக, இறைவார்த்தையை அள்ளித் தெளிக்கவேண்டும் என்பதை இயேசு உவமையில் மட்டும் கூறாமல்,
தன் வாழ்விலும் கடைபிடித்தார். மதத் தலைவர்கள் என்ற பாறைகளில் அவர் விதைத்த வார்த்தைகள்
வெறுப்பாக வெடித்தாலும் அவர் சளைக்காமல் விதைத்தார். பாவம் என்ற முட்புதர்களில் சிக்கியிருந்தோரிடம்,
அவர் விதைத்த வார்த்தைகள் சென்றடைந்தன என்பதை நற்செய்தியில் நாம் அடிக்கடி காண்கிறோம்.
வெறும் ஆர்வக் கோளாறால் அவரைக் காண வந்தவர்கள் பாதையோர நிலங்கள் என்பதை அறிந்தும் அவர்
அங்கு விதைப்பதை நிறுத்தவில்லை.
‘இறைவார்த்தையை விதைப்பது’ என்றதும், கோவில்களிலும்,
வேறு பல மத மேடைகளிலும் இறைவார்த்தையைப் பறைசாற்றுவதை மட்டும் எண்ணவேண்டாம். இறைவார்த்தையை
விதைப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல். அதன் வழியாக,
சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் விளைச்சல்! பாகுபாடுகள் பார்க்காமல், கேள்விகள்
கேட்காமல் விதைகளைத் தெளிப்பதைப் பற்றி சிந்திக்கும்போது, பொருள் நிறைந்த கதையொன்று நினைவுக்கு
வருகிறது... நாட்டிலேயே தலைசிறந்த சோளத்தை வளர்ப்பவர் என்ற விருதை திருவாளர் மைக்கிள்
அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் பெற்றுவந்தார். அவரது தொடர் வெற்றியின் இரகசியத்தை அறிய, ஒரு
நாளிதழின் நிருபர் அவரைப் பேட்டி கண்டார். பேட்டியின்போது திரு.மைக்கிள் பகிர்ந்துகொண்ட
ஒரு விவரம் நிருபருக்கு வியப்பாக இருந்தது. திரு.மைக்கிள் அவர்கள், தன் நிலத்தைச் சுற்றியிருந்த
மற்ற நில உரிமையாளர்களுக்கு, தன்னிடம் இருந்த சிறந்த விதைகளைக் கொடுத்தார் என்பதே அந்த
வியப்பான விவரம். "உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுடன் போட்டி போடுகிறவர்கள் என்பதை
அறிந்தும், நீங்கள் ஏன் அவர்களுக்கு சிறந்த விதைகளைத் தந்தீர்கள்?" என்று நிருபர் கேட்டபோது,
திரு.மைக்கிள் கூறிய விளக்கம் இதுதான்: "இதைப்பற்றி ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்?
நன்கு வளர்ந்துள்ள சோளக் கதிரின் மகரந்தத் தூள் காற்றில் கலந்து அடுத்த நிலங்களில்
உள்ள சோளக் கதிர்களில் மகரந்த சேர்க்கை செய்கின்றன, இல்லையா? அப்படியிருக்க,
என் நிலத்தைச் சுற்றியுள்ளவர்கள் நிலங்களில் தரக் குறைவான சோளக் கதிர்கள் வளர்ந்தால்,
அது என் கதிர்களின் தரத்தையும் குறைத்துவிடுமே! அதனால், நான் தலை
சிறந்த சோளத்தை உருவாக்க வேண்டுமென்றால், என்னைச் சுற்றியிருப்போரும் நல்ல
சோளத்தை உருவாக்க வேண்டும். எனவேதான் நல்ல விதைகளை சுற்றியுள்ள நில உரிமையாளர்களுக்கும்
தருகிறேன்" என்று அவர் சொன்ன பதில் வியப்பைத் தந்தாலும், ஆழ்ந்ததோர் உண்மையையும்
சொல்லித் தருகின்றது.
விதை விதைப்பவர் உவமையை இன்று இறைவார்த்தையாக ஏற்கும் நாம்,
தங்கு தடையேதுமின்றி இறைவார்த்தையை விதைக்கும் நல்ல விதைப்பாளர்களாக மாறுவோம். இறைவார்த்தையை
நம் வாய்மொழியாக விதைப்பதைவிட, நமது வாழ்வின் வழியே விதைப்பதில் ஆற்றலோடு செயலாற்றுவோம்.
நாம் இறைவார்த்தை வழி, உன்னத வாழ்வு வாழ்வதற்கு, நம்மைச் சுற்றியிருப்போரும் உன்னத வாழ்வு
பெறவேண்டும் என்ற உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம். இறைவன் இந்த நற்பணியில் நமக்குத்
துணை புரிவாராக!