காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து எருசலேம் காரித்தாஸ் கண்டனம்
ஜூலை,12,2014. பாலஸ்தீனாவின் காசாவில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் அப்பாவி மக்கள்
கொல்லப்படுவது, குறிப்பாக, பெண்களுக்கும் சிறாருக்கும் எதிரான வன்முறைகள் குறித்த தனது
கண்டனத்தை வெளியிட்டுள்ளார் எருசலேம் காரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருள்பணி Raed Abusahlia. பாலஸ்தீனப்
பகுதியில் நான்காவது நாளாக இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இம்மாதம் 9ம் தேதிக்கும்
10ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும்
கூறினார் அருள்பணி Abusahlia. இதற்கு முந்தைய இஸ்ரேலின் தாக்குதல்கள், ஹமாஸ் இஸ்லாமியப்
புரட்சியாளரின் காவல் நிலையங்கள், அரசு கட்டிடங்கள் போன்றவற்றை குறிவைத்து நடத்தப்பட்டன,
ஆனால் இம்முறை குடிமக்களின் வீடுகள், கட்டிடங்கள், அகதிகள் முகாம்கள் போன்றவற்றின்மீது
நடத்தப்படுகின்றன என ஊடகச் செய்திகள் கூறுகின்றன. மேலும், புனித பூமியில் இடம்பெறும்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பின் குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்கு மத்தியில் அப்பகுதியில்
குடியேறியுள்ள இந்திய கத்தோலிக்க குடியேற்றதாரர்கள் புனித பூமியில் அமைதியும் ஒப்புரவும்
ஏற்பட செபித்தனர். இதற்கிடையே, காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள
பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐ.நா. கூறுகின்றது.