ராஞ்சி உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயர் நியமனம்
ஜூலை,09,2014. பிலார் அருள் பணியாளர்கள் என்று அழைக்கப்படும் புனித பிரான்சிஸ் சேவியர்
துறவு சபையைச் சேர்ந்த அருள் பணியாளர் தியடோர் மஸ்கரீனஸ் (Theodore Mascarenhas) அவர்களை,
இந்தியாவின் ராஞ்சி உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
இப்புதனன்று நியமித்துள்ளார். 1960ம் ஆண்டு கோவாவில் பிறந்த அருள் பணியாளர் மஸ்கரீனஸ்
அவர்கள், புனித பிரான்சிஸ் சேவியர் துறவு சபையில் இணைந்து, 1988ம் ஆண்டு அருள் பணியாளராக
திருநிலைப்படுத்தப்பட்டார். ஐந்து ஆண்டுகள் வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பணிபுரிந்த
இவர், உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்திவரும் பாப்பிறை விவிலிய மையத்தில் பயின்று,
முனைவர் பட்டம் பெற்றார். 2006ம் ஆண்டு முதல் திருப்பீடக் கலாச்சார அவையில் பணியாற்றிவரும்
அருள் பணியாளர் மஸ்கரீனஸ் அவர்கள், கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்திலும், ஆஞ்செலிகம்
பாப்பிறை பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.