2014-07-07 16:07:44

திருத்தந்தை பிரான்சிஸ் - பாலியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்ட உங்களைக் காணும்போது என் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன


ஜூலை,07,2014. தன்னை மறுதலித்தப் பேதுருவை இயேசு திரும்பிப் பார்த்தபோது, பேதுருவின் கண்களில் கண்ணீர் வழிந்ததுபோல், பாலியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்ட உங்களைக் காணும்போது என் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார்.
அருள் பணியாளர்களால் பாலியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டோருள் 6 பேர், அவர்களுடன் துணைக்குவந்த 6 பேர், மற்றும் இது குறித்து விசாரித்துவரும் குழுவின் உறுப்பினர்கள் என்ற ஒரு சில குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் இத்திங்கள் காலை சாந்தா மார்த்தா இல்லத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், என் மனதில் வேதனையையும், துன்பங்களையும் சுமந்து வருகிறேன் என்று கூறினார்.
தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளை சில அருள் பணியாளர்களும், ஆயர்களும் தவறாக நடத்தியது, கடவுளையே அவமதிப்பதற்கு ஒப்பாகும் என்று மேலும் கூறினார் திருத்தந்தை.
இவ்வாறு பாலியல் முறையில் தவறாக நடத்தப்பட்டோர், பிற்காலத்தில் தங்கள் வாழ்வில் மன அளவில் பாதிக்கப்பட்டுள்ளது, அவர்கள் குடும்பங்களையே பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையக் குற்றங்கள், கடவுள் மீது நாம் கொள்ளும் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் இழக்க வைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.