2014-07-05 15:31:15

மாற்றங்கள் கல்வியிலிருந்து தொடங்குகின்றன, Mandalay பேராயர்


ஜூலை,05,2014. மியான்மாரில் இடம்பெற்று வரும் பெரிய மாற்றங்கள் நல்ல முன்னேற்றத்தின் அடையாளமாக இருக்கின்றவேளை, அந்நாட்டில் எழுப்பப்பட்டு வரும் கல்லூரிகளும் தனியார் கல்வி நிறுவனங்களும் கல்விக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன என, மியான்மாரின் Mandalay பேராயர் Paul Grawng கூறினார்.
மியான்மாரில் கல்விக்குக் கொடுக்கப்பட்டுவரும் முக்கியத்துவம் பற்றி பீதெஸ் செய்தி நிறுவனத்துக்குத் தகவல் அனுப்பியுள்ள பேராயர் Grawng, மியான்மாரில் பெரிய மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன, பல நகரங்களில் மரத்தாலும் மூங்கிலாலும் வேயப்பட்டிருந்த வீடுகள், கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன, கான்கிரீட் கட்டிடங்களும் அதிகரித்து வருகின்றன, இவற்றில் கல்விக்கூடங்கள் முக்கியமானவை என்று கூறினார்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் மலைப்பகுதிகளில் அருள்பணியாளர்கள் மூங்கிலால் அமைத்த பள்ளிகள் கிராம மக்களின் வளரச்சிக்கு எவ்வாறு உதவியுள்ளன என்பதையும் விளக்கினார் பேராயர்.
மாற்றத்தின் புதிய சகாப்தத்தில் மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் பலர் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர் எனவும், இக்காலத்தில் புதிய கல்வி மையங்களையும், நிறுவனங்களையும் அமைத்து மக்கள் உண்மையிலும் சுதந்திரத்திலும் வாழ நாம் உதவ வேண்டும் எனவும் கூறினார் Mandalay பேராயர் Paul Grawng.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.