ஜூலை05,2014. இந்த ஆண்டு இந்தியாவின் சராசரி மழைப்பொழிவின் அளவு மிகக் குறைவாக இருக்கும்;
வறட்சி அதிகரிக்கும் என, தனியார் வானிலை ஆய்வு மையம் ஒன்று தெரிவித்துள்ளது. 'ஸ்கைமெட்'(Skymet)
என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுக்கு, 96-104 விழுக்காடுவரை
மழைப்பொழிவு இருந்தால் அது சராசரி மழைப்பொழிவு எனப்படும் எனவும், இந்த ஆண்டு சராசரிக்கும்
குறைவாக, 91 விழுக்காடு மழைப்பொழிவு மட்டுமே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. பருவமழை
குறைவால், நாடு முழுவதும் 60 விழுக்காடும், வடமேற்கு மாநிலங்களில், 80 விழுக்காடும்,
மத்திய மாநிலங்களில், 75 விழுக்காடும், தென் மாநிலங்களில், 50 விழுக்காடும் வறட்சியினால்
பாதிப்பு ஏற்படும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது கடந்த மாதம், சராசரி அளவைவிட,
43 விழுக்காடு குறைவாக மழை பெய்து உள்ளது. ஆனாலும், ஆகஸ்ட்டில் சில இடங்களில் நல்ல மழைப்
பொழிவை எதிர்பார்க்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, நாடு முழுவதும்
பருவமழையில் பெரும் மாற்றம் காணப்படும். சராசரி மழைப் பொழிவை விட மிகவும் குறைந்த அளவே
மழைப் பொழிவு இருக்கும். கடந்த, 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிக குறைந்த மழை பெய்யும்
எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத்,
மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், உ.பி., உத்தரகண்ட், ம.பி., மேற்கு வங்கம்,
திரிபுரா ஆகிய 12 மாநிலங்களில் உள்ள முக்கிய அணைகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளதாகத்
தெரியவந்துள்ளது.