2014-07-03 17:04:17

திருப்பீடச் செயலர் உட்பட, கர்தினால்கள் அவையில், இனி 9 கர்தினால்கள் இடம்பெறுவர் - அருள் பணியாளர் Lombardi


ஜூலை,02,2014. திருத்தந்தையுடன் ஆலோசனைகள் மேற்கொண்டுவரும் கர்தினால்கள் அவையில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்கள் இணைக்கப்பட்டு, இந்த அவையில் இனி 9 கர்தினால்கள் இடம்பெறுவர் என்று திருப்பீடத்தின் செய்தித் தொடர்பாளரான இயேசு சபை அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜூலை 1, இச்செவ்வாய் முதல், இவ்வெள்ளி முடிய நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டங்களில் திருத்தந்தை முழுமையாகப் பங்கேற்று வருகிறார் என்றும் அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள் தெரிவித்தார்.
வத்திக்கான் ஆளுமை அமைப்பில் உள்ள அனைத்து அலுவலகங்களின் மதிப்பீடுகள் இடம்பெற்றுவரும் இந்த ஆலோசனைக் கூட்டங்களில், குறிப்பாக, வத்திக்கான் வங்கி என அழைக்கப்பட்ட IOR எனப்படும் வத்திக்கான் சமய சார்பான செயல்பாடுகள் துறையின் மதிப்பீடு இச்செவ்வாய் மற்றும் புதன் கூட்டங்களில் இடம்பெற்றது.
திருப்பீடத்தின் 2013ம் ஆண்டு கணக்கு வழக்கு நிலையும், இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டங்களும் இக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.