திருத்தந்தை பிரான்சிஸ் - நிலத்தடி கண்ணிவெடிகள் கோழைகளின் கருவிகள்
ஜூலை,02,2014 பொதுவாக நாம் பயன்படுத்தும் அழிவுக் கருவிகள், குறிப்பாக, நிலத்தடி கண்ணிவெடிகள்
கோழைகளின் கருவிகள் என்றும், அழிவுக் கருவிகளைப் பயன்படுத்தும் நாம் அனைவருமே தோல்வியடைகிறோம்
என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். அண்மையில் ஆப்ரிக்காவின் Mozambique
நாட்டின், Maputo நகரில் கண்ணிவெடிகளுக்கு எதிராக நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டோருக்கு
திருத்தந்தையின் சார்பில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள
செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. நாடுகளுக்கிடையே நடைபெறும் மோதல்கள் தீர்ந்த
பிறகும், நிலத்தடி கண்ணிவெடிகள் அந்நாடுகளில் தொடர்ந்து புதைந்திருப்பது, மோதல்களையும்,
அழிவையும் தொடர்கின்றன என்று தன் செய்தியில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை. நிலத்தடி
கண்ணிவெடிகளை முற்றிலும் அழிக்கும் கருத்துடன் கூடியுள்ள இக்கருத்தரங்கு, உலகிலிருந்து
அனைத்து அழிவுக் கருவிகளையும் அழிக்கும் முயற்சிக்கு ஒரு முன்னோடியாக விளங்கவேண்டும்
என்ற தன் ஆவலையும் ஆசீரையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தி வழியாக அனுப்பியுள்ளார்.