ஜப்பான், சீனாவிடம் இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் : அமர்த்தியா
சென்
ஜூலை,02,2014 பொருளாதார வளர்ச்சி குறித்த விடயத்தில், ஆசிய நாடுகளான ஜப்பான் மற்றும்
சீனாவிடம் இருந்து இந்தியா ஏராளமான பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று, நொபெல் பரிசு
பெற்ற அமர்த்தியா சென் அவர்கள் கூறியுள்ளார். இலண்டன் மாநகரின், ஏசியா ஹவுசில் (Asia
House) நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அமர்த்தியா சென் அவர்கள், 'இந்தியாவில், ஒரு துடிப்புமிக்க
புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. அதேவேளையில், நலவாழ்வு மற்றும் கல்வி மேம்பாட்டில் மத்திய
அரசு கவனம் செலுத்த வேண்டும்,' என்றார். மேலும், ஊழல் ஒழிப்பில் மத்திய அரசு கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள அமர்த்தியாசென் அவர்கள், 'மோடி
அரசு பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும்,
அது இப்போதைய தேவைக்கு போதாது என்ற நிலையிலேயே உள்ளது,' என்றார். மதச்சார்பின்மை
குறித்து குறிப்பிட்ட அமர்த்தியா சென் அவர்கள், 'மோடி அரசு பெரும்பான்மை பெற்றுள்ளது
என்றாலும், சிறுபான்மையினரின் நலனையும் அது கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியா ஒரு
ஜனநாயக நாடு. மதச்சார்பின்மை கொண்டது. இங்கு வாழும் ஒவ்வொரு மக்களும் தங்கள் கருத்துக்களை
சொல்ல முழு உரிமை உள்ளது என்று நொபெல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் அவர்கள் வலியுறுத்தினார்.