அண்டார்டிக் பகுதியில் அமெரிக்க வாழ் இந்திய அறிவியலாளரின் பெயர் தாங்கிய பனிமலை
ஜூலை,02,2014 தென்கிழக்கு அண்டார்டிக் பகுதியிலுள்ள ஒரு பனிமலைக்கு அமெரிக்க வாழ் இந்திய
அறிவியலாளரான அகௌரி சின்ஹா (Akhouri Sinha) அவர்களின் பெயரைச் சூட்டி அமெரிக்கா கவுரவித்துள்ளது. மின்னசோட்டா
பல்கலைக் கழகத்தில் மரபணுவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் அகௌரி சின்ஹா, 1972
மற்றும் 74-ம் ஆண்டுகளில் பெல்லிங்ஸ்ஹவுசென் (Bellingshausen) மற்றும் அமுந்சென் (Amundsen)
கடல்பகுதிகளில் வாழும் திமிங்கிலம், சீ்ல், பறவைகள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கையை ஆய்வு
செய்யும் பணியில் ஈடுபட்டார். 100க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ள
சின்ஹா அவர்கள், கடந்த 25 ஆண்டுகளாக பட்டப்படிப்பு மாணவர்களுக்குக் கற்பித்து வருகிறார். விலங்குகளின்
எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் இவரின் ஆய்வு, முன்னோடியாக அமைந்ததைக் கவுரவிக்கும் விதமாக,
அமெரிக்கப் புவியியல் அளவைத் துறை, தென்கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள மெக்டொனால்ட் மலைப்பகுதியிலுள்ள
990 மீட்டர் உயரமுள்ள மலைக்கு சின்ஹா அவர்களின் பெயரைச் சூட்டி கவுரவித்துள்ளது.