2014-06-30 15:50:56

திருத்தந்தை கொரியாவுக்கு வருகை தரும் தருணத்தில், இரு கொரிய நாடுகளிடையே ஒப்புரவை வளர்க்கும் வாய்ப்பு உள்ளது - கர்தினால் Yeom Soo-jung


ஜூன்,30,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரியாவுக்கு வருகை தரும் தருணத்தில், வட மற்றும் தென் கொரிய நாடுகளிடையே பேச்சு வார்த்தைகளைத் துவக்கும் புதுமை நிகழ வாய்ப்பு உள்ளதென்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார், தென் கொரிய கர்தினால், Andrew Yeom Soo-jung.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசியாவில் மேற்கொள்ளும் முதல் பயணம் தங்கள் நாட்டிற்குக் கிடைத்துள்ளது ஒரு பெரும் பேறு என்பதைக் குறிப்பிட்ட, Seoul பேராயர், கர்தினால் Yeom Soo-jung அவர்கள், திருத்தந்தையின் முதல் ஆசியப் பயணம் ஆசிய இளையோரை மையப்படுத்தி இருப்பது நம்பிக்கை தரும் அடையாளம் என்று குறிப்பிட்டார்.
வட மற்றும் தென் கோரிய நாடுகளிடையே உருவான பிரிவால், வட கொரியாவில் ஆயர்கள், அருள் பணியாளர்கள், அருள் சகோதரிகள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டதையும், நாட்டை விட்டு விரட்டப்பட்டதையும் வருத்தத்துடன் நினைவுகூர்ந்த கர்தினால் Yeom Soo-jung அவர்கள், தற்போது Pyongyang நகரில் மட்டும் 3000த்திற்கும் அதிகமான கத்தோலிக்கர்கள் வாழ்ந்த போதிலும், அவர்களுக்குப் பணியாற்ற அருள் பணியாளர் ஒருவரும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் திருப்பயணம் மேற்கொண்ட வேளையில், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் அரசுத் தலைவர்களை வத்திக்கானுக்கு வரவழைத்து, அமைதிக்காகச் செபித்ததைப் போல, இரு கொரிய நாடுகளிடையே ஒப்புரவை உருவாக்க, திருத்தந்தையின் பயணம் ஒரு வாய்ப்பாக அமையும் என்ற தன் நம்பிக்கையை கர்தினால் Yeom Soo-jung அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளின் ஒற்றுமைக்காக, ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் Seoul உயர் மறைமாவட்டப் பேராலயத்தில் திருப்பலி கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட கர்தினால் Yeom Soo-jung அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகை, இந்த ஒப்புரவை வளர்க்கும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.