ஜூன்,28,2014. முதல் உலகப் போரைத் தூண்டிய படுகொலையின் நூறாண்டு விழா இச்சனிக்கிழமையன்று
கடைப்பிடிக்கப்பட்டது. நான்காண்டுகள் நடந்த முதல் உலகப் போர், ஒரு தலைமுறையினரை வரையறுக்கும்
அனுபவமாக மாறியதோடு, உலகில் பல பேரரசுகள் வீழ்ச்சியுறவும், புதிய நாடுகள் உருவாகவும்
காரணமானது. ஆஸ்திரிய பட்டத்து இளவரசர் ஆர்ச்ட்யூக் ப்ரான்ஸ் பெர்டினாண்ட் மற்றும்
அவரது மனைவி சோபி ஆகிய இருவரும் செர்பிய தேசியவாதி காவ்ரிலொ ப்ரின்சிப் என்பவரால் கொலை
செய்யப்பட்டது, ஆறே வாரங்களில் போர் மூளச்செய்யும் தொடர் நிகழ்ச்சிகளைத் தூண்டியது. இது
அடுத்த நான்காண்டுகளுக்கு நீடித்த மேலும் பரவலான மோதலுக்கு வழிவகுத்தது.