ஜூன் 29, திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கான நாள்
ஜூன்,28,2014. இறைவனோடு நண்பர்களாக இருப்பதென்பது, பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் பேசுவதுபோன்று,
எளிமையாகச் செபிப்பதாகும் என, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி
ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், புனிதர்கள் பேதுரு பவுல்
விழாவாகிய ஜூன் 29ம் தேதி இஞ்ஞாயிறன்று திருத்தந்தைக்கான பிறரன்பு நாள், “பிறரன்பின்
சாட்சிகளாக இருங்கள்” என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் உலகெங்கும்
கத்தோலிக்க ஆலயங்களில் எடுக்கப்படும் உண்டியல் பணம், தேசிய இயற்கைப் பேரிடர்கள் மற்றும்
போர்களால் பாதிக்கப்படுகிறவர்களுக்கும், இன்னும் பிற பிறரன்பு பணிகளுக்குமென திருத்தந்தை
செய்யும் உதவிக்கென வழங்கப்படுகின்றது. இராயப்பர் காசு என்றழைக்கப்படும் இந்த உண்டியல்
பற்றி பேட்டியளித்த பேராயர் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், ஏழைகளுக்காகக் குரல் கொடுக்கும் திருத்தந்தை
அவர்களின் பிறரன்புப் பணிகளுக்கு அனைவரும் தாராளமாக கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.