புனித சவேரியாரின் திருப்பண்டங்களை ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பார்வையிடுவார்கள்
ஜூன்,27,2014. 2014ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி முதல் 2015ம் ஆண்டு சனவரி 4ம் தேதி வரை
கோவாவில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருப்பண்டங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலுமிருந்து ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள்
அத்திருப்பண்டங்களைப் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக, இந்நிகழ்வின் தலைமை
நிர்வாகி அருள்பணி ஆல்பிரட் வாஸ் தெரிவித்தார். 1506ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி இஸ்பெயினில்
பிறந்த புனித பிரான்சிஸ் சவேரியார், இந்தியாவின் கோவாவுக்கு 1542ம் ஆண்டு மே 6ம் தேதி
வந்தார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆசியாவில் மறைப்பணியாற்றிய இப்புனிதர் சீனாவின் சான்சியன்
தீவில் 1552ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி இறந்தார். இப்புனிதரின் உடல் போர்த்துக்கீசிய
காலனியாகிய மலாக்காவில் முதலில் வைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து கோவாவின் குழந்தை
இயேசு பசிலிக்காவில் வைக்கப்பட்டது.