2014-06-27 16:02:48

துன்பங்களின்போது விசுவாசத்துக்கு உறுதியுடன் சாட்சி பகர ஆண்டவரிடம் சக்தி கேட்போம், திருத்தந்தை


ஜூன்,27,2014. வாழ்வில் இன்னல்களைச் சந்திக்கும்போது, நம் விசுவாசத்துக்கு மகிழ்வுடன் சாட்சி பகருவதற்குத் தேவையான சக்தியை நம் ஆண்டவரிடம் கேட்போம் என, இவ்வெள்ளியன்று தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், உரோம் அகுஸ்தீனோ ஜெமெல்லி கத்தோலிக்க மருத்துவமனை தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு இவ்வெள்ளி(ஜூன்27) மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அம்மருத்துவமனை சென்று நோயாளிகளைச் சந்தித்து திருப்பலி நிகழ்த்துவதாய் திட்டமிடப்பட்டிருந்தது. திருத்தந்தைக்குப் பதிலாய் மிலான் கர்தினால் ஆஞ்சலா ஸ்கோலா அவர்கள் திருப்பலி நிகழ்த்துகிறார். திருத்தந்தை அவர்கள் தயார் செய்திருந்த மறையுரையையும் வழங்குகிறார் கர்தினால் ஸ்கோலா.
இயேசுவின் திரு இதய பல்கலைக்கழக மருத்துவமனை என்ற பெயரில் இயங்கும் இந்த அகுஸ்தீனோ ஜெமெல்லி மருத்துவமனையில் இந்நிகழ்வு இயேசுவின் திரு இதய விழாவான இவ்வெள்ளியன்று நடைபெறுகிறது.
1981ம் ஆண்டு மே 13ம் தேதி வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் துப்பாக்கிக் குண்டால் சுடப்பட்டது முதல் சில தடவைகள் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.