2014-06-26 16:43:33

செப்டம்பர் 28, குடும்பம் பற்றிய வருகிற அக்டோபர் ஆயர் மாமன்றத்துக்காகச் செபிக்கும் நாள்


ஜூன்,26,2014. வருகிற அக்டோபர் 5 முதல் 19 வரை குடும்பம் பற்றிய 3வது சிறப்பு ஆயர் மாமன்றம் வத்திக்கானில் நடைபெறவிருக்கும்வேளை, இம்மாமன்றம் சிறப்புற அமைவதற்கென, வருகிற செப்டம்பர் 28ம் தேதியன்று சிறப்பாக செபிக்குமாறு உலகக் கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளது வத்திக்கான்.
குடும்பம் பற்றிய சிறப்பு ஆயர் மாமன்றத்திற்கான முன்வரைவுத் தொகுப்பை இவ்வியாழனன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்ட வத்திக்கான் அதிகாரிகள் இச்செப நாளை அறிவித்தனர்.
இந்தத் தொகுப்பை, உலக ஆயர் மாமன்றப் பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி அவர்கள் தலைமையிலான குழு ஆறு ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டது.
“குடும்பங்களுக்கு நற்செய்தி அறிவிப்பதிலுள்ள மேய்ப்புப்பணி சவால்கள்” என்ற தலைப்பில் 3வது சிறப்பு ஆயர் மாமன்றம் நடைபெறும்.
மேலும், “இயேசு கிறிஸ்து குடும்பத்தின் அழைப்பையும் அதன் பொருளையும் வெளிப்படுத்துகிறார்” என்ற தலைப்பில், 2015ம் ஆண்டில் குடும்பம் பற்றிய உலக ஆயர் மாமன்றம் நடக்கும் எனவும் கர்தினால் பால்திச்சேரி அறிவித்தார்.
குடும்பம் மற்றும் திருமணம் குறித்து உலகின் தலத்திருஅவைகளுக்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு வந்த பதில்களின் அடிப்படையில் இந்த முன்வரைவுத் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் அடிப்படை அமைப்பாக இருக்கின்ற குடும்பம் இக்காலத்தில் நெருக்கடிகளையும், சவால்களையும் எதிர்கொள்கின்றது என்றும், இவற்றுக்குத் திருஅவை உதவும் வழிகள் குறித்து ஆராயப்படும் என்றும் பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.