ஈராக்கில் மோதல்கள் முடிவு பெற ஜூன் 18, அனைத்து கத்தோலிக்கர்களும்
மேற்கொண்ட உண்ணா நோன்புடன் கூடிய செபம்
ஜூன்,19,2014. ஈராக்கில் நடைபெற்றுவரும் மோதல்கள் முடிவு பெற ஜூன் 18, இப்புதனன்று அந்நாட்டின்
அனைத்து கத்தோலிக்கர்களும் உண்ணா நோன்புடன் கூடிய செபத்தில் ஈடுபட, கல்தேய வழிபாட்டு
முறை முதுபெரும் தந்தை, முதலாம் லூயிஸ் ரபேல் சாக்கோ அவர்கள் விண்ணப்பித்தார். ஈராக்கின்
குடிமக்கள் வன்முறையையும் போரையும் கைவிட்டு, அமைதியைத் தேடுவதற்கு, குழந்தைகளுடன் இணைந்து
குடும்பங்கள் வேண்டிக்கொள்வது சக்திவாய்ந்த ஒரு கருவி என்று Mosul நகரின் கல்தேய வழிபாட்டு
முறை பேராயர் Amel Shamon Nona அவர்கள் கூறினார். இயேசுவின் திரு இதயத்திற்கு ஒப்புகொடுக்கப்பட்டுள்ள
ஜூன் மாதத்தில், அந்த இதயம், ஈராக் மக்களின் இதயங்களை, அமைதி குடிகொள்ளும் இதயங்களாக
மாற்றவேண்டும் என்று செபிக்கும்படி பேராயர் Nona விண்ணப்பித்தார். இதற்கிடையே, ஈராக்
நாட்டில் பணியாற்றச் சென்றுள்ள ஐ.நா.வின் UNICEF அமைப்பைச் சார்ந்தவர்கள், இப்போரினால்
அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைக் காப்பது தங்கள் முதல் கடமை என்று அறிவித்துள்ளனர்.