"விருந்தோம்பல் ஒன்றே புலம்பெயர்ந்தோருக்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்பு" - இயேசு
சபையினர்நடத்திய கருத்தரங்கு
ஜூன்,18,2014. ஜூன் 20, இவ்வெள்ளியன்று கடைபிடிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் உலக நாளையொட்டி,
உரோம் நகரில், புலம்பெயர்ந்தோர் பராமரிப்பிற்கென, இயேசு சபையினர் நடத்திவரும் Astalli
மையம், கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. "விருந்தோம்பல்
ஒன்றே புலம்பெயர்ந்தோருக்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்பு" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட
இக்கருத்தரங்கில், திருத்தந்தையர் பலர் புலம்பெயர்ந்தொரைக் குறித்து வெளியிட்ட கருத்துக்கள்
விவாதிக்கப்பட்டன. "அரசு எல்லைகள், பொருளாதார கட்டுமானங்கள், அரசியல் நிலைப்பாடுகள்
அனைத்தையும் தாண்டி, அச்சமின்றி நாம் நமது நாடுகளை, புலம்பெயர்ந்தொருக்குத் திறந்துவிடவேண்டும்"
என்று திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் கூறிய கருத்துக்கள் இக்கருத்தரங்கில்
முக்கிய இடம் பெற்றன. அதேபோல், "தூக்கியெறியும் கலாச்சாரத்தை விட்டு விலகி, அனைவரையும்
வரவேற்கும் விருந்தோம்பலைக் கடைபிடித்தால் மட்டுமே, இவ்வுலகம் முன்னேற்றம் அடையும்" என்று
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களும் முக்கிய இடம் பெற்றன. இக்கருத்தரங்கில்
பேசப்படும் அனைத்து கருத்துக்களையும் திரட்டி, Astalli மையம் தன் வலைத்தளங்களில் விரைவில்
வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.