2014-06-16 15:53:12

திருத்தந்தை பிரான்சிஸ், செப்டம்பர் 21ம் தேதி, ஆல்பேனியா நாட்டிற்குச் செல்கிறார்


ஜூன்,16,2014. வருகிற செப்டம்பர் 21ம் தேதி, ஆல்பேனியா நாட்டில் உள்ள Tirana நகருக்குத் தான் செல்லவிருப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செபத்தின் இறுதியில் அறிவித்தார்.
பல்லாண்டுகளாக பல்வேறு கருத்தியல்களால் பாதிக்கப்பட்டு துன்புறும் ஆல்பேனியா நாட்டிற்கு, தன் உறுதுணையையும் அன்பையும் வெளிப்படுத்த தான் இந்த ஒரு நாள் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக திருத்தந்தை அறிவித்தார்.
மேலும், ஈராக் நாட்டில் கடந்த பல நாட்களாக நிகழ்வதை, மிகுந்த கவலையுடன் தான் பின்பற்றிவருவதாகக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரோடும் சேர்ந்து அந்நாட்டிற்காக அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம் என்று கூறி, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களுடன் இணைந்து 'அருள் நிறை மரியே' என்ற செபத்தை செபித்தார்.
கூடியிருந்த மக்களில், பல நாடுகளிலிருந்து வந்தோரை வாழ்த்தியத் திருத்தந்தை, குறிப்பாக, இல்லங்களில் மருத்துவ உதவியாளர்களாகப் பணியாற்றும் பலரை தான் சிறப்பாக வாழ்த்துவதாகத் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.