திருத்தந்தை பிரான்சிஸ் : கடவுள் நம்மிடம் பணியைக் கொடுப்பதற்கு நம்மைத் தயாரிக்கிறார்
ஜூன்,13,2014. நம் ஆண்டவர் நம்மிடம் ஒரு பணியைக் கொடுக்கும்போது அதற்காக நம்மை நன்கு
தயாரிக்கிறார், நாம் அதற்கு செபம் மற்றும் அன்புறுதியுடன் பதிலளிக்க வேண்டும் என,
இவ்வெள்ளி காலை கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வெள்ளி காலை சாந்தா மார்த்தா
இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இறைவாக்கினர் எலியாவின் அழைப்பை மையமாக
வைத்து வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை. அடக்கமான மெல்லிய ஒலியில்
கடவுள் தம்மை எலியாவுக்குக் காட்டினார் எனவும், ஆண்டவர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டுணருவது
எப்படி என எலியா தெரிந்து வைத்திருந்தார் எனவும், ஆண்டவரும் எலியாவை, தேர்ந்து தெளியும்
கொடையால் நிறைத்திருந்தார் எனவும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை. ஆண்டவர்
நம்மிடம் ஒரு பணியைக் கொடுக்க விரும்பும்போது, எலியாவைத் தயாரித்ததுபோல, நம்மையும் அவர்
நன்றாகத் தயாரிக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, அவ்வாறு அவர் நம்மைத் தயாரிக்கும்போது
நம் இதயத்தையும் ஆன்மாவையும் சோதனைகளுக்கு மத்தியில் தயாரிக்கிறார் என்று கூறினார். ஆண்டவர்
நம்மைப் பணிவிலும், விடாஉறுதியிலும் தயாரிக்கிறார் என்றும் கூறிய திருத்தந்தை, ஆண்டவர்
நமக்குக் கொடுத்த பணியை அடையும்போது நாம் கடந்துவந்த பயணம் முக்கியமானது என்றும் உரைத்தார். இந்தப்
பயணத்திற்கு விசுவாசமாக இருப்பதும், ஆண்டவரால் நாம் வழிநடத்தப்பட நம்மைக் கையளிப்பதும்
அவசியம் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.