ஜூன்,10,2014. மியான்மாரில் கச்சின் மாநிலத்துக்கு எதிராக போர் தொடங்கியதன் மூன்றாமாண்டு
நினைவுகூரப்படும் இவ்வேளையில், அம்மாநிலத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுமாறு
கேட்டுள்ளன, அந்நாட்டின் பல்வேறு சமய மற்றும் சமூகக் குழுக்கள். கத்தோலிக்க, பிரிந்த
கிறிஸ்தவ சபையினர் உள்ளிட்ட 55 பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மியான்மார் அரசுக்கு
முன்வைத்துள்ள விண்ணப்பத்தில், அரசும் இராணுவமும் தாக்குதல்களை நிறுத்தி உரையாடலைத் தொடங்குமாறு
வலியுறுத்தியுள்ளனர். கச்சின் வட மாநிலத்தில் ஏறக்குறைய 17 ஆண்டுகள் அமைதி நிலவிய
பின்னர் 2011ம் ஆண்டில் மீண்டும் மோதல்கள் தொடங்கின. இதில் எண்ணற்ற அப்பாவி மக்கள் இறந்துள்ளனர்.
குறைந்தது 200 கிராமங்கள் அழிக்கப்பட்டன மற்றும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் புலம்
பெயர்ந்துள்ளனர். மியான்மாரில் 135க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் உள்ளன.