வேற்றுக் கிரகம் மோதியதில் உருவானது நிலா, புதிய ஆய்வுகள்
ஜூன்,07,2014. பூமி உருவாகிவந்த சமயத்தில் அதன்மீது வேறொரு கிரகம் மோதிய பின்னர் பூமியைச்
சுற்றி உருவான கோளம்தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு ஆதாரம் கிடைத்திருப்பதாக
புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. நாற்பது ஆண்டுகளுக்கும் முன்னால் அப்பல்லோ விண்கலத்தில்
நிலவுக்குச் சென்றிருந்த விண்வெளி வீரர்கள் எடுத்துவந்த நிலவுப் பாறைகளில் வேதிய ஆய்வுகளை
மேற்கொண்ட ஜெர்மானிய அறிவியலாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். நானூற்றைம்பது கோடி
ஆண்டுகளுக்கு முன்னர் வேறு ஒரு கிரகம் வந்து பூமியின் மீது பயங்கரமாக மோதியது என்பதும்,
அப்படி மோதிச் சிதறிய சிதறல்கள் தான் பூமியைச் சுற்றி ஒன்றுதிரண்டு நிலவு உருவானது என்பதும்தான்
1980கள் முதல் அறிவியலாளர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாக இருந்துவருகிறது. நூதனமான
ஆய்வுகளை தற்போது நிலவுப் பாறைகளில் மேற்கொண்டபோது, பூமிப் பாறைகளின் வேதியக் கூற்றுக்கு
சம்பந்தமில்லாத வெளிக்கிரக தோற்றத்துக்கான அடையாளங்கள் நிலவுப் பாறைகளில் தெரிவதாக ஜெர்மனியிலுள்ள
கொயெடிங்கென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூமிப் பாறைகளுக்கும் நிலவுப்
பாறைகளுக்கும் இடையில் சிறு வேறுபாடு இருப்பதை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும், இரண்டு
கிரகங்கள் மோதிக்கொண்ட கோட்பாட்டை ஆதரிப்பதாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளதென்றும்,
இந்த ஆய்வை வழிநடத்திய டாக்டர் டேனியல் ஹெர்வார்ட்ஸ் கூறினார். பூமிப் பாறைகளில் ஆக்ஸிஜன்
ஐசடோப்களுடைய கலவை ஒரு விதமாகவும், நிலவுப் பாறைகளில் அது வேறு விதமாகவும் இருப்பதாகவும்
தற்போது கண்டறியப்பட்டுள்ளது.