ஆப்கானிஸ்தானில் அருள்பணியாளர் பிரேம் குமார் அவர்கள் கடத்தப்பட்டுள்ளது தொடர்பாக மூன்று
தலிபான்கள் கைது
ஜூன்07,2014. ஆப்கானிஸ்தானில் தமிழக இயேசு சபை அருள்பணியாளர் அலெக்ஸிஸ் பிரேம் குமார்
அவர்கள் கடத்தப்பட்டுள்ளது தொடர்பாக மூன்று தலிபான்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக, இந்திய
வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜூன்,02, இத்திங்களன்று அடையாளம் தெரியாதவர்களால்
கடத்தப்பட்டுள்ள அருள்பணியாளர் பிரேம் குமார் அவர்களை விடுவிக்கும் முயற்சியில், ஆப்கானிஸ்தான்
எல்லா வழிகளிலும் முயற்சித்து வருகின்றது என்றும், நிலைமை மிகவும் சிக்கலாக இருப்பதாகவும்
இந்திய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் கூறியதாக ஆசியச் செய்தி நிறுவனம் தெரிவித்தது. 47
வயதான அருள் பணியாளர் பிரேம் குமார் அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில்
பணியாற்றி வருகிறார். 2000மாம் ஆண்டு அருள் பணியாளராகத் திருநிலை பெற்ற பிரேம் குமார்
அவர்கள், கொடைக்கானல் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்டோர், மற்றும் பழங்குடியினர் மத்தியில்
பணி புரிந்தவர். கடந்த ஏழு ஆண்டுகளாக, இயேசு சபையினரால் நடத்தப்படும் புலம்பெயர்ந்தோர்
பணி அமைப்பில் இணைந்து, இலங்கை மக்களுக்காகவும், தற்போது ஆப்கானிஸ்தான் மக்களுக்காகவும்
பணியாற்றி வருகிறார்.