2014-06-06 15:43:11

மறைசாட்சி புனித ஜான் ஒகில்வி அவர்களின் 400வது ஆண்டு நிறைவு விழாவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்ள ஸ்காட்லாந்து பேராயர் அழைப்பு


ஜூன்,06,2014. இயேசு சபையைச் சேர்ந்த புனித ஜான் ஒகில்வி (John Ogilvie) அவர்கள், மறைசாட்சியான 400வது ஆண்டு நிறைவு விழாவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்ள வேண்டுமென, ஸ்காட்லாந்து பேராயர் Philip Tataglia அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
தங்களுக்கு நான் விடுக்கும் அழைப்பு மிகக் குறுகிய கால அளவே என்றாலும், தாங்கள் இவ்விழாவில் பங்கேற்பது, எங்கள் ஆன்மீக, மேய்ப்புப்பணிக்கு பெரும் உந்துதலாக அமையும் என்று, Glasgow பேராயர் Tataglia அவர்கள், தன் மடலில் குறிப்பிட்டுள்ளார் என்று அம்மறைமாவட்டச் செய்திக் குறிப்பு கூறுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வழைப்பை ஏற்று வருகை தந்தால், அவர் ஸ்காட்லாந்துக்கு வருகை தரும் மூன்றாம் திருத்தந்தையாக இருப்பார் என்றும், திருத்தந்தையால் இவ்விழாவிற்கு வர இயலவில்லை எனினும், மறைசாட்சியான புனித ஜான் ஒகில்வி அவர்களின் 400வது ஆண்டு நிறைவு, ஸ்காட்லாந்து மக்களின் நம்பிக்கையை வளர்க்கும் ஒரு தருணமாக அமையும் என்று, பேராயர் Tataglia அவர்கள் கூறியுள்ளார்.
1579ம் ஆண்டு பிறந்த ஜான் ஒகில்வி அவர்கள், 1596ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருமறையைத் தழுவி, பின்னர், 1608ம் ஆண்டு, இயேசு சபையில் இணைந்தார். அவரது மத நம்பிக்கை காரணமாகவும், அவர் அருள் பணியாளராக ஆற்றிய மனமாற்றங்களுக்காகவும் 1615ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி தூக்கிலிடப்பட்டார். 1976ம் ஆண்டு, திருத்தந்தை 6ம் பால் அவர்கள், இவரைப் புனிதராக உயர்த்தினார்.

ஆதாரம் : ICN







All the contents on this site are copyrighted ©.