2014-06-06 15:42:56

பொருளாதாரம், மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டதே தவிர, மனிதர்கள் பொருளாதாரத்திற்காக அல்ல - கர்தினால் Maradiaga


ஜூன்,06,2014. உலகப் பொருளாதார வழிமுறைகள், புதுவகையான பொய் தெய்வ வழிபாடாக மாறிவருகிறது என்று Honduras நாட்டுக் கர்தினால், Oscar Rodriguez Maradiaga அவர்கள் கூறியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் நகரில், அமெரிக்கக் கத்தோலிக்கப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் அண்மையில் உரையாற்றிய கர்தினால் மரதியாகா அவர்கள், இவ்வாறு கூறினார்.
பொருளாதாரம் குறித்து, கத்தோலிக்கத் திருஅவை தெளிவான எண்ணங்கள் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படும் கருத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் மரதியாகா அவர்கள், மனிதம் என்ற அடிப்படை உண்மையின் மீது எழுப்பப்படும் பொருளாதாரமே பொருளுள்ளது என்பதை, கத்தோலிக்கத் திருஅவை உணர்ந்துள்ளது என்று பதிலிறுத்தார்.
பொருளாதாரம், மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டதே தவிர, மனிதர்கள் பொருளாதாரத்திற்காக அல்ல என்பதை, உலகப் பொருளாதார அறிஞர்கள் உணர்வதற்கு, அவர்கள் மக்களை நெருங்கிவந்து, மக்களோடு மக்களாக இருக்கவேண்டும் என்ற சவாலையும், கர்தினால் மரதியாகா அவர்கள், தன் உரையில் முன்வைத்தார்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.