ஜூன்,05,2014. நல்ல சமாரியர் போன்று துன்புறுவோரின் காயங்களைத் தொடுவதற்கு நாம் வெட்கப்படாதிருப்போம்;
ஆயினும், அவர்களின் காயங்களை, தெளிவான அன்புச் செயல்களால் குணப்படுத்த முயற்சிப்போம்
என, இவ்வியாழனன்று தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற 27ம் தேதியன்று உரோம் அகுஸ்தினோ ஜெமெல்லி கத்தோலிக்க
மருத்துவமனையைப் பார்வையிடுவார் என திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள்
அறிவித்துள்ளார். இயேசுவின் திருஇதய பல்கலைக்கழக மருத்துவமனை என்ற பெயரில் இயங்கும்
இந்த மருத்துவமனையை இயேசுவின் திருஇதய விழாவன்று பார்வையிடுகிறார் திருத்தந்தை. இந்த
மருத்துவமனையின் 90வது ஆண்டையொட்டி அதைப் பார்வையிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.