ஜூன் 5, ஆர்மீனிய அப்போஸ்தலிக்கச் சபையின் உயர் தலைவர், கத்தோலிக்கோஸ்
முதலாம் ஆராம் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கிறார்
ஜூன்,03,2014. ஜூன் 5, வருகிற வியாழனன்று, ஆர்மீனிய அப்போஸ்தலிக்கச் சபையின் உயர் தலைவரான
கத்தோலிக்கோஸ் முதலாம் ஆராம் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்க வத்திக்கான்
வருகிறார். 1995ம் ஆண்டு உயர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் ஆராம் அவர்கள்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து செபிப்பார் என்றும், இருவரும் புனித பேதுருவின்
கல்லறைக்குச் செல்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1997ம் ஆண்டு முதலாம் ஆராம் அவர்கள்
வத்திக்கானுக்கு வருகை தந்து, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களைச் சந்தித்தார்.
பின்னர், மீண்டும் 2008ம் ஆண்டு, அவர் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை,
வத்திக்கானில் சந்தித்தபோது, இருவரும் இணைந்து கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருவழிபாட்டில்
கலந்துகொண்டனர். உலகெங்கும் 60 இலட்சம் பேரை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஆர்மீனிய
அப்போஸ்தலிக்கச் சபையின் உயர் தலைவர், கத்தோலிக்கோஸ் முதலாம் ஆராம் அவர்கள், திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபின், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் உறுப்பினர்களையும்,
ஏனைய வத்திக்கான் உயர் அதிகாரிகளையும் சந்திப்பார்.