2014-06-03 17:31:32

இறைவனடி சேர்ந்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களுக்கு ஜூன் 5 வத்திக்கானில் இறுதித் திருப்பலி


ஜூன்,03,2014. ஜூன் 2, இத்திங்கள் காலை உரோம் நகரில் இறைவனடி சேர்ந்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களின் மறைவையொட்டி, புதுச்சேரி கடலூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் அன்டனி ஆனந்தராயர் அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், கர்தினால் லூர்துசாமி அவர்கள், முதலில் இந்தியாவிலும், பின்னர் அகில உலகத் திருஅவையிலும் நற்செய்தி பரப்பும் பணியில் தன்னையே அர்ப்பணித்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இத்திங்களன்று இறைவனடி சேர்ந்த கர்தினால் லூர்துசாமி அவர்களுக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராயலத்தில், ஜூன் 5ம் தேதி வியாழனன்று இறுதித் திருப்பலியும், வழிபாடும் நடைபெறும்.
கர்தினால்கள் குழுவின் தலைவர், கர்தினால் Angelo Sodano அவர்கள் தலைமையில் திருப்பலி நடைபெறும் என்றும், திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டு, இந்த வழிபாட்டின் இறுதிச் செபங்களைச் சொல்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு பிப்ரவரி 5ம் தேதி தன் 90வது வயதை நிறைவு செய்த கர்தினால் லூர்துசாமி அவர்களின் உடல் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு ஜூன் 8 அல்லது 9ம் தேதி, புதுச்சேரியில் அடக்கம் செய்யப்படும் என்று புதுச்சேரி கடலூர் உயர் மறைமாவட்டச் செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : VIS / UCAN








All the contents on this site are copyrighted ©.