அன்னை மரியாவின் வணக்க மாத இறுதி நிகழ்வில் திருத்தந்தை வழங்கிய உரை
ஜூன்,02,2014. அன்னை மரியா தன் உறவினராகிய எலிசபெத்தைச் சந்திக்க விரைந்து சென்றதுபோல்,
நம்முடைய தேவைகளிலும் உதவி செய்வதற்கு விரைந்து வருகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் கூறினார். மே 31, இச்சனிக்கிழமை மாலை, அன்னை மரியாவின் வணக்க மாத இறுதி நிகழ்வாக,
வத்திக்கான் தோட்டத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் பங்கேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
ஊர்வலத்தின் இறுதியில் லூர்து அன்னை கெபிக்கு அருகே மக்களைச் சந்தித்த போது இவ்வாறு கூறினார்.
புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் தலைமைப் பொறுப்பாளரான கர்தினால் Angelo Comastri
அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம் சனிக்கிழமை மாலை புனித ஸ்தேவான் ஆலயத்தில் துவங்கி,
லூர்து அன்னையின் கெபியில் முடிவுற்றது.